Tuesday, March 10, 2009

தண்ணீர்க் கொலை-சிறு கதை

தண்ணீர்க் கொலை



காகம் தாகம் தணிந்த கதை, படம் பார்த்துக்கதை சொல்லில் பார்த்தது. காகம் மாறாமல் அதே உருவத்தில் ஆனால் நீர் குறைந்த குடம் மட்டும் பல வகைகளில். உள்ளிருப்பை வெளிக் காட்டும் ஊடுருவல் கொண்ட மண் பானைகள். உள்ளிருப்பைக் காட்டுவது கண்ணாடி அல்லவா? அது எப்படி மண் பானைஆக முடியும்? அல்லது மண்பானை தன்னுள்ளை எப்படி வெளிக்காட்ட இயலும்? எனவே கதைக்காக நான் வரைந்த ஓவியக் காகம் சிறியது. பானை, கண்ணாடிக் குடுவையானது. நீர் சிறு சிறு தொடரற்று வெட்டப் பட்ட கோடுகளாயின. வாழையிலையின் வெளிமுனையில் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்புச் சுருளை இடை வெளி விட்டு விட்டு இழுத்து மெலிதான தொடர் தொங்கலாக வெளித் தெரியும், கரும் சுருள் நிறமற்ற அரூப இழையையும் உடன் இருத்தி வித்தை காட்டும் வண்ணம் குடுவையில் தண்ணீர் கருப்பு பென்சில் கோடுகள் பாதி நிறைந்தன. சிறு கற்கள் காகம் கொத்தி குடுவையிலிட, நீர் வெளிவந்து தாகம் தணிந்தது. பறக்கும் காகத்தைப் பார்த்து, சிரிப்பு வந்தது. கல்லைச் சற்றுவேகமாக எறிந்து பானையை அல்லதுகண்ணாடியை - உடையும் பொருளானதை - உடைத்து ஏன் ஓட்டை வழியே நீர் அருந்தி இருக்கக்கூடாது இந்த காகம்? இது காகத்தின் புத்தி சாதுர்யத்திற்கானது மட்டுமல்ல, தாகம் தணிந்ததற் கானதாகவும் எடுத்துக் கொள்ளாமல் கனமான பொருளிட்டால் நீர் மேலேறும் என்பதாகப் புரிந்துக் கொள்ளப் படல் வேண்டும். ஆனால் இன்று அந்தப் புரிந்து கொள்ளல் தவறானது.

எந்தவொரு தனி வீடும் அல்லது நீண்ட அகல நிலமும் அடுக்க கத்திற்கானது என்பது இந்த நகர வாழ்க்கையில் எழுதப்படாத விதி । இதே விதியின் அடிப்படையில் அருகிருந்த வீடும் அழிக்கப்பட்டுவிடும்; அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது। சுற்றிலும் மரங்களும் அதன் பூக்களும், கனிகளும் இன்னும் சில நாட்களில் இருப்பற்றுப் போக நிச்சயம் நேரிடும்। வாழ்ந்து, வறுமைக்காளாகி அழிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய குடும்பம் போன்று அடுத்திருந்த செவ்வக நிலம் மாறிக் கொண்டு வருகிறது. கடப்பாறை, பெரும் சுத்தியல், மண்வெட்டி, காலை முதல் மாலை வரை சூரியனின் கீழ் நடமாடும் கரும் மனிதர்கள் எல்லாமே. சத்தத்தையும் பார்வையையும் வடிகட்டி உட் செலுத்த ஒருபில்டர் பொருத்திக் கொள்ள நேர்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் கண்களின்மீதும், காதுகளின் பக்கவாட்டிலும் சிறு வடிகட்டிகள் எப்போதும் தொங்கிக் கொண்டிருந்தன. பாளம் பாளமாய்ச் சுவர்த் துண்டுகள் எங்கும் சிதறி உள்ளிருக்கும் சிமெண்டையும், சுண்ணாம்பையும் வண்ணப் பூச்சுகளையும் பிரித்து, பிரிந்து இணைந்து கிடந்தன எங்கும்.

இன்றும் அதிகாலையில் தொடங்கப்பட்டது அழிப்பு வேலை. வீட்டின் பின்புறம் தரையிலிருந்து எழுப்பட்டிருந்த வட்டச் சுவரும், உருளையைத் தாங்கும் கம்பமும் காணாமல் போயிருந்தது. வட்டச்சுவர் நொறுக்கப்பட்டு, கிணற்றுக்குள் எறியப்பட்டுக்கொண்டு இருந்தது. விழப்படும் கனப் பொருள்களின் எதிரொலி மனிதன் உள் குதிக்கும் சப்தத்திற்கு ஒப்பாகவே இருந்தது. நடமாடும் மனிதர்கள் எவரும் நீருக்குள்ளோ, சுவற்றுக்கடியிலோ சென்று விடக் கூடாது என்ற தவிப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.

சுவரில்லா ஆழ வட்டத்தைச் சுற்றிலும் மனிதர்கள்; நடமாடி நடமாடிப் பெரும் சுவர்த் துண்டுகளை உருட்டியும், புரட்டியும் தூக்கி எறிந்தும் நீருக்கள் இட்டபடியே.

காகத்திற்கு மேலெழும்பிய நீர் இதிலிருந்தும் மேல் எழும்பும். சுவரற்ற தரை தாண்டிப் பெருக்கெடுத்து ஜி.எஸ்.டி. சாலை நெடுக ஓடி ஆங்காங்கே உயிர்களின் தாகம் தீர்த்து நகரத்தின் குதூகல நாளாக மாறி, நீர் விரோதமற்று, எல்லை அருகி, எங்கும் பாய்ந்து, எல்லோரையும் நேசிக்கும். மனிதனும், பயிரையும் உயிரையும், நீரையும் நேசிப்பான். அப்போதுகாதலர்கள், குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் அடித்துக் கொண்டும், மூச்சுத் திணறி சிரித்தும், நகரம், அகமும் புறமும் குளிர்ந்து, நீர் வழி பின் தொடரும் இசையும், ஓசையுமாய்.

ஏதும் நகழவில்லை. இதில் எதுவுமே நிகழவில்லை. அடிமை மிருகம் போல் தனக்குள் எறிந்த அத்தனை சுவர்த் துண்டுகளையும் ஏற்றுக் கொண்டது கிணறு. தண்ணீரைச் சுவரும், செங்கற்களும் உறிஞ்ச தனது வட்டத்தில் எறிந்தத்தனையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்ப்பின்றி. சலனமற்று இருந்தது கிணறு. சுவர் துண்டுகளுக்கு இடையிலேயும், மேலும் மேலும் எறியப்படும் முண்டுச் சுவர்களாலும் காயம் பட்டு நசுங்கி, அனைத்து உயிர்களையும் காக்கும் நன்னீர் இறந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பள்ளம் மறைய தரை நோக்கி இளகிய நீர் எழும்பாமல் இறுகிய சுவர் எழும்ப, நீர் இருந்த தடமுமற்று, கிணறு முழுதுமாக இறந்து கிடந்தது சமதரையாக .